5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையே ஆரம்பமாகும் நேரடி விமான சேவை
5 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு இந்த மாதம் 26ம் திகதி முதல் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
2020ம் ஆண்டுக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டது.
கொரோனா தொற்று மட்டுமின்றி இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்கு இந்த மாதம் 26ம் திகதி முதல் விமான சேவைகளை தினந்தோறும் வழங்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, இண்டிகோ நிறுவனம் டெல்லி–குவாங்சோ இடையே நேரடி விமான போக்குவரத்துகளை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
“இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தினசரி விமானங்கள் மீண்டும் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் 2 இடங்களில் இருந்து சீனாவுடன் நேரடி இணைப்பை மீண்டும் தொடங்கிய முதல் நிறுவனங்களில் ஒன்றாக நாம் உள்ளோம்.” என்று இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அறிகுறியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.





