ஈரான் தலைவர்களை அழிப்பது மிகப்பெரிய கௌரவம்: ட்ரம்ப்!
“ஈரானின் பயங்கரவாத ஆட்சியை இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அழித்து வருகிறோம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump சூளுரைத்துள்ளார்.
மத்திய கிழக்கு போர்ச்சூழல் இன்று 13 ஆவது நாளாக தொடர்கின்றது.
ஈரான்மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டு தாக்குதல் நடத்திவருகின்றன. பதிலுக்கு இஸ்ரேல்மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தலங்கள்மீதும் ஈரான் தாக்குதல் நடத்திவருகின்றது.
போரை முடிவுக்குக் கொண்டு வர இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பதிவில்,
“ஈரானின் பயங்கரவாத ஆட்சியை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாங்கள் முழுமையாக அழித்து வருகிறோம்.
எனினும், தோல்வியடைந்த நியூயார்க் டைம்ஸ் செய்திகளைப் படித்தால், நாங்கள் வெற்றி பெறவில்லை என்று நீங்கள் தவறாக நினைப்பீர்கள்.
ஈரானின் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் வான்படை இனி இல்லை. ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் மற்ற ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன.
அவர்களின் தலைவர்கள் பூமியில் இருந்து அழிக்கப்பட்டு விட்டனர். எங்களிடம் இணையற்ற ராணுவ சக்தி உள்ளது, எண்ணிலடங்கா ஆயுதங்கள் உள்ளன, மேலும் நிறைய நேரமும் உள்ளது.
இன்று அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். அவர்கள் கடந்த 47 ஆண்டுகளாக உலகம் முழுவதும் அப்பாவி மக்களை கொன்று வருகின்றனர்.
இப்போது நான், அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக அவர்களை அழித்து வருகிறேன். அவ்வாறு செய்வது எத்தனை பெரிய கௌரவம்.” ஏன மேற்படி பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.




