கிவுல் ஓயா போராட்டத்திற்காக பிரதி அமைச்சர் பழிவாங்குகிறார் – வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு
கிவுல் ஓயாத்திட்டத்தை நிறுத்தக்கோரி நேற்றய தினம் இடம்பெற்ற போராட்டத்திற்கு பழிவாங்கும் வகையில்
பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம் சுமத்தியுள்ளார்.
வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“கிவுல் ஓயாத்திட்டம் தமிழ் மக்களுக்கு வேண்டாம் என எமது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்றையதினம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம். அந்த போராட்டத்தின் விளைவாக எனக்கு இன்று அரச தரப்பால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
அந்வகையில் இன்றையதினம் வெலிஓயா என மாற்றப்பட்ட மணலாறு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது. அதில் நான் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தேன்.
அந்தகூட்டத்தில் எனக்கு வழமையாக ஒதுக்கப்படும் இடத்தில் அமர்வதற்கு நான் சென்றபோது அங்கு அமர வேண்டாம் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தார்.
அது தொடர்பாக நான் அவரிடம் விளக்கம் கேட்டபோது. இதுவே நடைமுறை என கூறினார். வழமையாக கூட்டம் இடம்பெறும் போது எனக்கு வழங்கப்பட்டு வந்த இடத்திலேயே நான் அமரச்சென்றேன்.
அத்துடன் கூட்டம் ஆரம்பிக்க முன்னரே தமிழ் மொழி பெயர்ப்பு தேவை என்பதை பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தியிருந்தேன். ஆனால் அந்த விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
எனவே என்னை அவமதிக்கும் நோக்கிலேயே இவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்கிறீர்கள் என ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.
மக்களின் பிரச்சனைகளை அறிவதற்காக இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றபோதும் மக்கள் பிரதிநிதி என்று பாராமல் அவர்கள் அவமதித்துள்ளனர். இதனால் இக்கூட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு வெளியேறினேன்.
இது ஒரு அநீதியான பழிவாங்கும் செயற்பாடு. நாங்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். எமக்கு இந்த கதிரை முக்கியம் அல்ல. நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் விளைவே எனக்கான இருப்பிடம் மறுக்கப்பட்டதற்கான காரணமாக உள்ளது.
ஆனால் என்ன நடந்தாலும் கிவுல் ஒயாத்திட்டம் நிறுத்தப்படும் வரை எமது குரல்கள் ஓங்கி ஒலிக்கும். எங்களது எதிர்ப்பை தொடர்ச்சியாகவே நாங்கள் காட்டுவோம். எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம்” என்றார்.





