சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனை – 6 மாதங்களின் பின் தமிழருக்கு நிறைவேற்றப்படும் சட்டம்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/04/singa.jpg)
சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனை வழங்கும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது.
இதற்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை அரசு மறுபரிசீலனை செய்து வந்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அங்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதற்கமைய, போதைப்பொருள் கடத்த முயன்றதாக கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தங்கராஜு சுப்பையா (வயது 46) என்பவருக்கு வருகிற 26ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
சிங்கப்பூர் அரசின் இந்த முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்கராஜுவை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்ற இறுதிவரை போராட உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கடுமையாக எடுத்து வரும் சிங்கப்பூர் அரசு, கடந்த ஆண்டு மட்டும் 11 பேரை இந்த வழக்கில் தூக்கில் போட்டது குறிப்பிடத்தக்கது.