டிட்வா – பேரிடர் 80 வீதமானோருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
“டிட்வா” புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 80 வீதமானோருக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் படி, இதுவரை 519 பேருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் அடையாளம் காணப்பட்ட மேலும் 92 நபர்களுக்கு சான்றிதழ்களை வழங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பேரிடரைத் தொடர்ந்து 611 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜல்தீபன் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக தற்போது காணாமல் போனதாகக் கூறப்படும் 164 பேரில், 92 நபர்களின் பெயர்கள் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த பிரதேச செயலக அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
அடையாளம் காணப்பட்ட அனைத்து சடலங்களுக்கும் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜல்தீபன் மேலும் கூறினார்.
இதனிடையே, கடந்த 2 ஆம் திகதி அரசு வெளியிட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் கீழ், திடீர் பேரிடர்கள் காரணமாக காணாமல் போனவர்கள் குறித்து குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த தகவலும் கிடைக்காவிட்டால், அவர்களுக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பேரிடரால் பாதிக்கப்பட்ட காணாமல் போன நபர் குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்றால், பதிவாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, சம்பந்தப்பட்ட பிராந்திய துணை அல்லது உதவி பதிவாளர் நாயகத்தின் ஒப்புதலுடன், பதிவாளர் நாயகத்தால், பிரதேச செயலாளர் மூலம் இறப்பு பதிவு சான்றிதழ்கள் வழங்கப்படும்.





