டித்வா புயல்: சட்டக் குழுவை அமைத்தது சஜித் அணி!
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் அரசாங்கத்தால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு உறுதியளிக்கப்பட்ட சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதியை பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.
ஒரு தகரத் துண்டு அடிபட்டுச் சென்றாலும் அதற்கும் 10 இலட்சம் ரூபா தருவோம் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
அதேபோல முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 50 லட்சம் ரூபாவும், காணியும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகூட இன்னும் முன்னெடுக்கப்படவில்லை. இது பாரதூரமான விடயம்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டபடி சகல நிவாரணங்களையும் வழங்க வேண்டும். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளது.
மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்படும்வரை ஐக்கிய மக்கள் சக்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக முன்நிற்கும்.” – என்றார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச.





