அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்துடன் அரங்கேறும் குற்றங்கள் – சவாலை சந்திக்க தயாராகும் அனுர!
போதைப்பொருட்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால சந்ததியினரையும் சமூகத்தையும் அதிலிருந்து மீட்டெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரைப் பறித்து, நாட்டின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் அழிக்கும் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் வர்த்தகத்திற்கு இனிமேலும் இடமளிக்க தமது அரசாங்கம் தயாராக இல்லை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, கைது செய்தல், புனர்வாழ்வு, தடுப்பு, பொதுமக்கள் அழுத்தம், மதம், விளையாட்டு மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு பன்முகத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
போதைப்பொருள் அச்சுறுத்தல் இயற்கையாக உருவாகவில்லை என்றும், அது நீண்ட காலமாக அரசியல்வாதிகள் மற்றும் சில அரச அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் உருவாக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் நிழலின் கீழ் போலியான ஒரு அதிகாரத்தை உருவாக்கிக்கொள்வதற்கு குற்றவாளிகளுக்கு இருந்த வாய்ப்பை தற்போதைய அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதால், அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து அந்த வலையமைப்பில் இருந்து அகன்று செல்லுமாறு அதனை ஆதரிக்கும் அரச அதிகாரிகளுக்கு கூறுவதாகவும் தெரிவித்தார். இந்த வர்த்தகத்தில் ஈடுபட்ட எவருக்கும் இனி ஒளிந்து கொள்ள வாய்ப்பு இருக்காது என்று ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
மேலும், கிராமங்களுக்கும் மதத் தலங்களுக்கும் இடையிலான கலாசார தொடர்பைப் பயன்படுத்தி இந்த அச்சுறுத்தலை ஒழிப்பதில் முன்னணியில் இருக்குமாறு மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இந்தப் பணியை வெற்றிகரமாக்கும் வகையில், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும் போது ஒழுக்கத்தையும் நாகரிகத்தையும் பேணுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டார்.
போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து அதிக நிதி ஒதுக்கப்படும் என்றும், இதற்காக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தேசிய செயல்பாட்டு மையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “எமது நாட்டை ஆக்கிரமித்துள்ள பேரழிவை தோற்கடிப்பதற்காக இன்று அனைவரும் ஒன்று திரண்டிருக்கிறோம். இந்த பேரழிவு எந்தளவு ஆழமானது மற்றும் நாகசரமானது என நாம் அறிவோம். எமது பிள்ளைகள் எமது சமூகம் என்பன இந்த மாயப் பேரழிவிற்கு இறையாகி வருகிறது. இது தற்பொழுது உருவானதொன்றல்ல. பல தசாப்தங்களாக வளர்ந்து இந்த பேரழிவு முழு சமூகத்திற்குள்ளும் புறையோடிச் சென்று பீதியை உண்டாக்கும் நிலைக்கு மாறியுள்ளது.
இந்தப் பயணத்தில் எமக்கு தெரிவு செய்யக் கூடிய இரு பாதைகள் தான் உள்ளன. முதலாவது முன்னரைப் போன்றே இதற்கு இடமளித்து கண்டு கொள்ளாமல் இருப்பது. இதற்கு எதிராக போராடுவது இரண்டாவது பாதையாகும். நானும் எனது அரசாங்கமும் இந்த பேரழிவை எதிர்த்து போராடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.
இந்தப் பேரழிவு எமது பிள்ளைகளை ஆட்கொண்டு வருகிறது. சிறை செல்லும் 64 வீதமானவர்கள் போதைப்பொருள் சார்ந்த தவறுகளுக்காக பிடிபடுபவர்களாகும். 18-26 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் இதற்கு கூடுதலாக இறையாகின்றனர். அவர்களின் எதிர்காலம், எதிர்பார்பார்ப்புகள் வீதிகளில் அழிந்து போகின்றன. இதனை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு பிள்ளைகள் பிறக்கும் போது பெற்றோர் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பர். ஆனால் தமது கண்முன்னே தமது பிள்ளைகள் நாசமடைவதை கண்டு அவர்கள் வேதனை அடைகின்றனர். பெற்றோர் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுகின்றனர். இந்த பேரழிவிற்கு முழு குடும்பமும் இறையாகின்றது. முழு குடும்ப அலகும் வீழ்ச்சியடையும் அச்சுறுலுக்கு முகங்கொடுத்துள்ளது.
கிராமம் கிராமமாக இந்த மாயச் சூறாவளி பரவி வருகிறது. உடைகளை காயவைக்கவோ நெல்லை காயப் போடவோ முடியாது. மகளை தனியாக வீட்டில் நிறுத்தி விட்டுச்செல்ல முடியாது என கிராமங்களில் வாழும் தாய்மார்கள் கூறுகின்றனர்.கிராமங்கள் பீதியில் உள்ளன. குற்றச்செயல்கள் கிராமங்களில் உருவாகின்றன. இந்த பேரழிவு முழு சமூகத்தையும் ஆட்கொண்டுள்ளது.
வீதி விபத்துக்களில் அநேகமானவை போதைப் பொருட்களுடன் தொடர்புபட்டவையாக உள்ளன. எமது நாட்டில் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான வன்முறைகளில் அதிகமானவை போதைப்பொருட்கள் சார்ந்தவை. பொது இடங்களில் விபரீதமான பாலியல் ஆசைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த பேரழிவு நாட்டில் பாரிய வீழ்ச்சியை உருவாக்குகிறது. கட்டுநாயக்கு- கொழும்பு நெடுஞ்சாலையின் பாதுகாப்பிற்கு அதிரடிப்படையை ஈடுபடுத்த நேரிட்டுள்ளது. கேபிள்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன. யானை வேலிக்கு இடப்பட்டுள்ள பெட்டரி திருடப்படுகிறது . பாலங்களில் உள்ள இரும்பை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். இதனால் நாட்டில் ஸ்தீரமற்ற நிலை உருவாகின்றது.
பொது சமூகத்தினதும் பிரஜைகளினதும் பாதுகாப்பிற்காக இந்த பேரழிவைத் தோற்கடிக்க வேண்டும். நாம் எடுக்கும் முன்னெடுப்பை நிச்சயமாக வெற்றி பெறச் செய்வோம். இதனுடன் தொடர்புபட்டதாக பாரிய நிதி வலையமைப்பு காணப்படுகிறது. ஒரு கிலோ 2 கோடி ரூபாவை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் போதைப் பொருள் உள்ளது. எமக்கு 800-900 கிலோ பிடிபடுகிறது. நாட்டிற்குள் வரும் அனைத்து போதைப் பொருட்களையும் நாம் கைப்பற்றவில்லை. அனைத்தையும் கைப்பற்றினால் அவை நாட்டிற்குள் வராது. அவர்கள் அனுப்பும் தொகையில் சிறு தொகையே கைது செய்யப்படுகிறது.
எந்தளவு தொகை விநியோகிக்கப்படுகிறது என்பது கைப்பற்றும் தொகையின் மூலம் கணிக்கலாம். கருப்புப் பொருளாதாரத்தை கட்டெியெழுப்பும் வர்த்தகமாக இது மாறியுள்ளது. அதனால் அவர்களிடையே சந்தையை பங்கு போடுவதில் மோதல் காணப்படுகிறது. ஒவ்வொரு குழுக்களுக்கிடையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதேச எல்லைகளுக்கு மற்றைய தரப்பு நுழைய முடியாது. போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாகவே இந்த கொலைகள் நடைபெறுகின்றன.
பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காவே அரச பொறிமுறையொன்று உள்ளது. ஆனால் அவர்களிடமுள்ள பண பலத்தினால் அரச பொறிமுறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் இதனை மறைத்து இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியாது. அவர்களிடையே ஆயுதங்கள் உள்ளன. அனுமதிப் பத்திரத்துடன் ஆயுதங்களை பயன்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கே உள்ளது. அரசிடம் இருக்க வேண்டிய ஆயுதங்கள் எவ்வாறு அவர்கள் கைகளுக்குச் சென்றது? சில இராணுவ முகாங்களில் இருந்து 73 ரீ 56 ரக துப்பாக்கிகள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. அதில் சுமார் 35 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன.அதற்குப் பயன்படுத்தும் ரவைகள் பிடிபட்டுள்ளன. இராணுவ கேர்னல் ஒருவர் தான் இவற்றை வழங்கியுள்ளார். அதற்காக அவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் கிடைத்துள்ளது. ஒரு பொலிஸ் அதிகாரி தனது ஆயுதத்தை விற்பனை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த ஆயுதக் குழுக்களிடமுள்ள பண பலத்தினால் இவை நிகழ்ந்துள்ளன.
இது தொடர்பான விசாரணைகளில் காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டுள்ளது. இராணுவம்,கடற்படை,விமானப்படை மற்றும் பொலிஸ் என்பன இதனைத் தடுக்க பெரும் பங்காற்றுகின்றன. ஆனால் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் அந்த கும்பலின் பண பலத்தில் சிக்கியுள்ளனர். தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் கருப்பு ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வாகனங்கள் இன்றி வாகன இலக்கத்தகடுகள் வழங்கப்பட்டுள்ளன. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலுள்ள சிலர் சட்டவிரோத வாகனங்கள் பாவனைக்கு வர பங்களித்துள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களம் தேசிய பாதுகாப்பிற்காக பங்களிக்கும் நிறுவனம். ஆனால் சில அதிகாரிகள் பாதாள தலைவர்களுக்கு கடவுச்சீட்டு தயாரித்து வழங்கியுள்ளனர். இவ்வாறு தான் அரச கட்டமைப்பிற்குள் இந்தப் பேரழிவு நுழைந்துள்ளது.
சுங்கத்திணைக்களத்திலுள்ள சிலருக்கும் இந்தச் கும்பலுடன் தொடர்பு உள்ளது. அதனால் உத்தியோகபூர்வ அரசாங்கம் இருப்பதைப் போன்று அதே அளவு பலமாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கும் அரச பொறிமுறையொன்றை தம்பிடியில் வைத்துள்ளனர். வெளிப்படையான அரசாங்கத்தைப் போன்றே மறைவான கருப்பு ஆட்சியொன்று உருவாகியுள்ளது.
இந்த நாட்டில் இரண்டு ஆட்சிகள் இருக்க முடியாது. மக்களின் ஜனநாயக ஆணையினால் உருவான ஆட்சி மாத்திரமே இருக்க முடியும். கருப்பு ஆட்சி ஒழிக்கப்படும் என உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம்.
அரசியல் கட்சிகளுக்குள்ளேயும் அவை நுழைந்துள்ளன. சிலர் மக்கள் பிரதிநிதிகள் ஆகின்றனர். உள்ளுராட்சி தலைவர்களாக தெரிவாகின்றனர். தனியான பட்டியல் தயாரித்து தேர்தலில் போட்டியிட சிலர் தயாராகி இருந்தனர். ஆட்சி அதிகாரம் ,எம்.பிகள் உருவாக்குவது வரையான ஆரம்ப விதை நடப்பட்டுள்ளது. இதனை அடையாளங் கண்டுள்ளோம். இந்த நிலை தானாக உருவானதல்ல. நீண்ட காலமாக அரசியல் மற்றும் சில அரச அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் தான் இது உருவானது. பிரஜைகள் அச்சத்துடன் உள்ளனர். சில வர்த்தகர்கள் இதிலிருந்து ஒதுங்க அஞ்சுகின்றனர்.போதைப் பொருள் விற்பனை செய்வதில் இருந்து ஒதுங்கினால் சுடப்படுகின்றனர்.
இதன்பின்னணியில் தெளிவான அரசியல் ஆசிர்வாதம் உள்ளது.அதிகாரிகளின் ஆதரவு இருக்கிறது. சிலருடைய சொத்துக்களை பார்த்தால் உழைப்பின் ஊடாக இந்தளவு சொத்துக்களை ஈட்ட முடியாது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்க்கமான கட்டத்திற்கு வர வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. நாம் இதனைச் செய்யாவிட்டால் வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என எம்மிடம் பலரும் கூறியுள்ளனர். இதனை மாத்திரம் நிறைவேற்றுங்கள் புண்ணியம் கிடைக்கும் என சில தாய்மார் கூறுகின்றனர். பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பலரும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை தோற்கடிக்க காவல்துறையை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை ஏற்கிறோம். தகவல்களை காவல்துறைக்கு வழங்கினால் மறு நிமிடமே வீட்டுக்கு வருவர் என கிராமங்களில் சொல்வார்கள். இதனை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் பெரு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.





