மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவும் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இதுவரை 90 மீனவர்களும், 254 விசைப்படகுகளும் இலங்கை வசம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள் கடலோர மீனவ சமூகத்தினரிடையே பெரும் பொருளாதார நெருக்கடியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்களையும் அவர்களது வாழ்வாதாரமான படகுகளையும் எவ்வித பாதிப்புமின்றி மீட்பதே தற்போதைய அவசரத் தேவை என முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கையாக உள்ளது.





