இலங்கையில் பருவநிலை மாற்றத்தால் உப்பு உற்பத்திக்கு கடும் பாதிப்பு – நெருக்கடியில் மக்கள்

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவும் எதிர்பாராத மழை காலநிலை உப்பு உற்பத்தியில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
உப்பு உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலுக்கு குறைந்தபட்சம் 40 முதல் 45 நாட்கள் வரை தடையற்ற சூரிய ஒளி தேவைப்படும் நிலையில், இலங்கை தற்போது ஆண்டு முழுவதும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விட்டுவிட்டு மழையைப் பெற்று வருகிறது.
இது உப்பு உற்பத்தியாளர்களுக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.
“சூரிய ஆவியாதல் முறை மூலம் கடல்நீர் உப்புப் படுக்கைகளில் சேகரிக்கப்பட்டு ஆவியாகி உப்புப் படிகங்களாக மாறுகிறது. 60-70 மி.மீ அளவுக்கான கனமழை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பெய்தால், உப்புப் படிமங்கள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்படுகிறது,” என தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயன் வெல்லல,
2020 ஆம் ஆண்டு முதல் கனமழை உப்பு உற்பத்தியைப் பாதித்து வருவதாகவும், இதுவே தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு ஒரு காரணம் என்றும் தெரிவித்தார். தற்போதைய அறுவடை 30,000 டன்களிலிருந்து 7,000 டன்களாகக் குறைந்துள்ளது, இது ஒரு பெரும் சரிவாகும்.
இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க தொழில்துறையில் எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் இல்லை என்றும், ஒவ்வொரு நாடும் இதே பிரச்சனையை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், தேசிய உப்பு நிறுவனம் உப்பு உற்பத்தியை அதிகரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொதுவாக, புத்தாழம், ஹம்பாந்தோட்டை, ஆனையிறவு, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய கடலோரப் பகுதிகளில் பரவலாக அமைந்துள்ள உப்புத் தொழில் மூலம் ஆண்டுக்கு சுமார் 180,000 டன் உள்நாட்டு மற்றும் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்து, இலங்கை உப்பு உற்பத்தியில் கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்ற நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.