இலங்கை மீண்டெழ சீனா துணை நிற்கும்!
கொழும்பு வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi , இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தியுள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று காலை நாட்டுக்கு வந்த சீன வெளிவிவகார அமைச்சருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. சீன தூதுரக அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath நன்றி தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குரிய திட்டங்கள் பற்றியும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர் என தெரியவருகின்றது.
இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டுள்ளன.
இலங்கையின் மீள் கட்டமைப்பு பணிகளுக்கு சீனா உதவி அளிக்கும் என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் இந்திய பிரதமரின் விசேட பிரதிநிதியாக கொழும்பு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





