இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மக்களுக்குப் பயன் தருவதாகவே அமையும் என
வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
“2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் வரவு செலவு திட்டம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஊழல் மோசடிக்கான பிணைமுறி மோசடிக்கு அடிக்குறிப்பு எழுதியவர்களே இந்த விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
நாட்டில் ஊழல் மோசடிக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் எதிர்க்கட்சிகள், அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். தேசிய உற்பத்திகளை அதிகரித்து மக்களுக்கு நிவாரணமளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதற்கமைய, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு முதல் அரசமுறை கடன்கள் மீளச் செலுத்தப்படும்” என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.




