“முடிந்தால் எங்களைப் பிடியுங்கள்” – அமெரிக்க சிறையிலிருந்து தப்பிச் சென்ற 10 கைதிகள்

அமெரிக்காவின் நியூ ஓர்லின்ஸ் சிறைச் சாலையிலிருந்து 10 கைதிகள் தப்பித்துள்ளனர்.
கைதிகள் வெள்ளிக்கிழமை (மே 16) நள்ளிரவுக்குப் பின் கழிவறைச் சுவரை உடைத்துத் தப்பித்ததாகச் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதிகள் தப்பிச் சென்ற சில மணி நேரத்திற்குப் பிறகுதான் அதிகாரிகள் சதித்திட்டம் குறித்து உணர்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் நியூ ஓர்லின்ஸ் பகுதியில் இச்சம்பவம் நடந்தது சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தப்பிச் சென்ற 10 கைதிகளில் ஒன்பது பேர் ஆபத்தானவர்கள் என்றும் அவர்களிடம் ஆயுதம் இருக்கலாம் என்றும் காவல்துறை எச்சரித்தது.கைதிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை காலை சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில் ஒரு கைதி கைது செய்யப்பட்டார். அவர் ஒரு காருக்குக் கீழ் பதுங்கியிருந்தபோது அதிகாரிகளிடம் சிக்கினார்.
தப்பிச் சென்ற கைதிகளில் சிலர் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்கள். தற்போது அவர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.