பிரித்தானியாவில் ‘பேய் சிறை’ சர்ச்சை: £100 மில்லியன் வரிப்பணம் வீணாகும் அபாயம்
பிரித்தானியாவின் டார்ட்மூர் சிறைச்சாலையில் நிலவும் நச்சு வாயு அபாயம் தெரிந்திருந்தும், 10 ஆண்டுகால குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நீதியமைச்சின் முடிவினால் வரி செலுத்துவோரின் 100 மில்லியன் பவுண்டுகள் வீணடிக்கப்படவுள்ளதாகப் நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது.
அதிக கதிர்வீச்சு கொண்ட ரேடான் (Radon) வாயு கசிவு காரணமாக 2024-இல் மூடப்பட்ட இந்தச் சிறைக்கு, தற்போது ஒரு கைதி கூட இல்லாத நிலையில் ஆண்டுக்கு 4 மில்லியன் பவுண்டுகள் வாடகை மற்றும் பாதுகாப்பிற்காகச் செலவிடப்படுகிறது.
2033-ஆம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற முடியாது என்பதால், இது ஒரு ‘பேரழிவுகரமான முடிவு’ எனப் பொதுக் கணக்குக் குழு சாடியுள்ளது.
கதிர்வீச்சினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், அங்கு பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் கைதிகள் என 500-க்கும் மேற்பட்டோர் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரத் தயாராகி வருகின்றனர்.
சிறைத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அவசரகதியில் எடுக்கப்பட்ட இந்த முடிவினால், உபயோகமற்ற ஒரு கட்டிடத்திற்குப் பொதுமக்கள் பணம் பல கோடிகளில் விரயம் செய்யப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.





