த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு
தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக த.வெ.க நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சர்ச்சை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், “வீதியில் நடந்து சென்றாலே தடியடி, சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது, இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக பொலிஸார் மாறிப் போனால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும், Gen – Z தலைமுறையும் ஒன்றாக கூடி அதிகாரத்துக்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதேபோல் இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்” என அந்த பதிவில் கூறியிருந்தார்.
இதற்குப் பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்து வந்த நிலையில் அவர் அந்த அப்பதிவை நீக்கினார்.
இந்த நிலையில் , ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





