321 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல் – கனேடியர்கள் இருவர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 321 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான
போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (10) காலை தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து நாட்டிற்கு வருகை தந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர்களின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32.159 கிலோகிராம் நிறையுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கனடாவைச் சேர்ந்த 25 வயதுடைய ஆண் ஒருவரும் 29 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





