நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை கம்போடிய மீறியதாக குற்றச்சாட்டு!

கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக தாய்லாந்து இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு நேற்று ஒப்புக்கொண்டன.
எல்லை தொடர்பான சிக்கல்களால் கடந்த வியாழக்கிழமை (24.07) எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது.
இந்த போரில் நேற்று (28.07) வரை இருதரப்பிலும் சேர்த்து 38 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 300000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்த்தனர்.
இந்த நிலையில் கம்போடியா போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக தாய்லாந்து இராணுவம்குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பேசிய தாய்லாந்து ராணுவ செய்தித் தொடர்பாளர் விந்தாய் சுவாரி “போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நேரத்தில் கம்போடிய படைகள் தாய்லாந்து எல்லைக்குள் பல பகுதிகளில் ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்தியதை தாய்லாந்து தரப்பு கண்டறிந்தது.
இது ஒப்பந்தத்தை வேண்டுமென்றே மீறுவதாகவும் பரஸ்பர நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தெளிவான முயற்சியாகவும் அமைகிறது. எனவே கம்போடியாவின் மீறல்களுக்கு தாய்லாந்து சரியான முறையில் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்
ஆனாலும் இதற்கு நேர்மாறாக “நள்ளிரவு 12 மணிக்கு போர் நிறுத்தம் ஏற்பட்டதிலிருந்து எங்கள் படைகள் தாக்குதல்களை நிறுத்தின” என்று கம்போடிய பிரதமர் ஹன் மானெட் தெரிவித்தார்.