இலங்கை செம்மணி மனித புதைகுழியில் குழந்தைகளுக்கு ‘பாலூட்டும் போத்தல்’

அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூட்டுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட சூப்பியுடனான போத்தல் குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து நேற்றைய தினம் (ஜூலை 24) குழந்தையின் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்டது குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல் என்பதை, இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 20வது நாளான இன்றைய தினம் (ஜூலை 25), பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்
“சிறு குழந்தையின் உடலம் மற்றும் பால் போத்தல் ஆகியன நேற்று பிற்பகல் அகழ்ந்து எடுக்கப்பட்டன. பால் போத்தல் சான்று பொருட்களாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளது.”
2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் 90 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
சட்டரீதியாக பிரேத பரிசோதனைக்குப் பின்னர் புதைக்கப்பட்ட ஒரு உடல் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 2 இல் காணப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
“இரண்டாவது சைட் புதைகுழியில் ஒரு சட்ட ரீதியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் ஒன்று அடையாளம் காணப்பட்டு அது பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளது.”
மனித புதைகுழியில் மேலும் மனித எலும்புகள் உள்ளதா என்பதை தீர்மானிக்க ஸ்கேன் பரிசோதனை நடத்துவதற்காக இன்று அந்தப் பகுதி சுத்தம் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.