பங்களாதேஷியர்களால் கடத்தப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்; பேச்சுவார்த்தைக்குப் பின் விடுவிப்பு

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை பங்ளாதேஷியர்கள் கடத்தியதாக வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்துலக எல்லையை ஒட்டி அமைந்துள்ள முர்ஷிதாபாத் மாநிலத்தில் புதன்கிழமை (ஜூன் 5) அச்சம்பவம் நிகழ்ந்தது.சில மணி நேரத்திற்குப் பிறகு அவ்வீரர் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முர்ஷிதாபாத் மாவட்டம், நூர்பூரின் சுத்தியாரில் அமைந்துள்ள எல்லைப் பாதுகாப்பு முகாமிற்கு அருகே, சாந்தினி சௌக்கில் அதிகாலைப் பொழுதில் அவ்வீரர் கடத்தப்பட்டார்.கத்தாலியா எனும் சிற்றூருக்கு அருகே பங்ளாதேஷியர்கள் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதை அவ்வீரர் தடுக்க முயன்றார். அதனால் ஆத்திரமடைந்த பங்ளாதேஷின் சப்பாய் நவாப்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த அக்கும்பல், அவரைக் கடத்திச் சென்றதாக எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
“அந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை பங்ளாதேஷியர்கள் கடத்திச் சென்று பிணையாக வைத்திருந்தனர். இவ்விவகாரத்தை பங்ளாதேஷ் எல்லைக் காவல்படைக்குக் கொண்டுசென்றதைத் தொடர்ந்து, சில மணி நேரத்திற்குப்பின் விடுவிக்கப்பட்டார். தற்போது எங்களோடு இருக்கும் அவர் நலமாக உள்ளார்,” என்று எல்லைப் பாதுகாப்புப் படை மூத்த அதிகாரி ஒருவர் விவரித்தார்.
இருநாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான சந்திப்பை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.இதனிடையே, கடத்திச் செல்லப்பட்ட அவ்வீரர் ஊரகப் பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு வாழை மரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த காணொளி வெளியாகியுள்ளது.
அக்காணொளியின் உண்மைத்தன்மையைச் சோதிக்க முடியவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அப்பகுதியில் பாதுகாப்பு நடைமுறைகளை எல்லைப் பாதுகாப்புப் படை மறுஆய்வு செய்து வருகிறது. ஆயினும், சம்பவம் குறித்த அதிகாரத்துவ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் என்டிடிவி செய்தி கூறியது.