கேரள முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரபூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கும் அவரது அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த மிரட்டல் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டது.
போக்குவரத்துத் துறை ஆணையர் அலுவலகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொச்சி அனைத்துலக விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
கேரள முதல்வரின் இல்லம் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரளக் காவல்துறை சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.
மோப்ப நாய்களுடன் சிறப்பு குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எனினும், இதுவரை எந்த வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல், கொச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 27) திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது