பெங்களூரு IPL கொண்டாட்ட சம்பவம்: காவல் ஆணையர் உட்பட 5 அதிகாரிகள் பணியிடைநீக்கம்

பெங்களூரில் IPL வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த வழக்கில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அதுகுறித்து விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அத்துயர நிகழ்வு குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இத்தகைய சூழலில்தான், இந்த சம்பவம் தொடர்பாக RCB அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ), டிஎன்ஏ நெட்வொர்க்ஸ் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
உயிரிழப்பு ஏற்படும் வகையில் கவனக்குறைவாகச் செயல்பட்டது, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள், கொலைக்குச் சமமில்லாத குற்றவியல் கொலை என பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்
மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக பெங்களூர் மாநகரக் காவல் ஆணையர் பி.தயானந்த், கூடுதல் ஆணையர் விகாஸ் குமார், துணை ஆணையர் சேகர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் ஆர்சிபி அணி நிர்வாகிகள், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் சித்தராமையா கூறினார்.
இந்த நிலையில், RCB அணி நிர்வாகிகளான நிகில் சோஸ்லே, டிஎன்ஏ நிறுவனத்தின் சுனில் மேத்யூ உள்ளிட்ட நால்வரை காவல்துறை அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகிறது.