இலங்கையில் தடை நீக்கம் – முதலாவது தொகுதி வாகனங்கள் இறக்குமதி!

இலங்கையில் வாகன இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் அதற்கான தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலாவது தொகுதி வாகனங்கள் நேற்றைய தினம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா லங்கா நிறுவனம் குறித்த வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.
சுற்றுலாத்துறைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிக்கமைய இந்த வானங்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த நிறுவனம், 26 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதுடன், அதில் பேருந்துகள் மற்றும் வேன் என்பன அடங்குகின்றன.
இதற்கிடையில், சாரதி உட்பட 10 அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் கார்கள், முக்கிய பிரமுகர்கள் அல்லது பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட விசேட வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விசேட நோக்க வாகனங்கள் என்ற பிரிவிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வாகன இறக்குமதியின் போது அரசாங்கத்திற்கு தமது சங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.