புலம்பெயர்ந்தோர் வருகை குறைவு மற்றும் பிறப்பு விகித வீழ்ச்சி – ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் சவால்
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் இந்த ஆண்டு வீழ்ச்சியைச் சந்திக்கும் என 2025 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை அறிக்கை எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, 2026 ஆம் ஆண்டில் அந்நாட்டின் மக்கள் தொகை 28 மில்லியனை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள போதிலும், வளர்ச்சி வீதம் 1.3 சதவீதமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பின் தற்காலிக விசாக்களில் வந்தவர்களின் விசா காலம் முடிவடைவதால், வெளிநாட்டவர்கள் வெளியேறுவது அதிகரித்து, நிகர குடியேற்றம் 2 லட்சத்து 60 ஆயிரமாகக் குறைய வாய்ப்புள்ளது.
மறுபுறம், பொருளாதார நெருக்கடி காரணமாக தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தாமதப்படுத்துவதால், பிறப்பு விகிதம் 1.45 ஆகச் சரிவடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குடியேற்றக் கொள்கைகளை இறுக்கமாக்க எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், குடும்பங்கள் மீதான நிதிச் சுமையைக் குறைத்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகப் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.





