இலங்கையில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முயற்சி : நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை!

இலங்கையில் அரிசிக்கு வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்ட மொத்த விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலை மாற்றப்படவில்லை அல்லது நீக்கப்படவில்லை என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அரிசி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சில்லறை விற்பனையாளர்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் அரிசிக்கு வழங்கப்படும் விலைகள் மாற்றப்பட்டுள்ளதாக சில்லறை விற்பனையாளர்களுக்குத் தெரிவித்து, சில நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முயற்சிப்பதாக தகவல்கள் வந்துள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கெக்குளு அரிசியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலை ரூ.220.00 ஆகவும், நாடு அரிசி ரூ.230.00 ஆகவும், சம்பா அரிசி ரூ.240.00 ஆகவும், கீரி சம்பா அரிசி ரூ.260.00 ஆகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்த, நாடளாவிய ரீதியாக சோதனைகள் மற்றும் விசாரணைகளை தொடர்ந்து நடத்தப்போவதாக அதிகாரசபை அறிக்கை வெளியிட்டுள்ளது.