ஈரனின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் : உச்சக்கட்ட பாதுகாப்பில் அமெரிக்கா!

அமெரிக்க இராணுவம், ஈரானில் உள்ள இஸ்ஃபஹான், ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகியவற்றில் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளன.
இந்த நகரங்களில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன.
நியூயார்க் நகர காவல்துறை (NYPD) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகரின் மத, கலாச்சார மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள மத்திய படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் NYPD கூறியுள்ளது.
வாஷிங்டன் டிசியின் பெருநகர காவல்துறை (Metropolitan Police Department) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணித்து வருவதாகவும், குடிமக்களை பாதுகாக்க மாகாண மற்றும் மத்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றாலும், மத தளங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை (LAPD) – யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை அதிகரித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது நம்பகமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும், ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.