சிங்கள, பௌத்த வாக்குகளாலேயே அநுர பதவிக்கு வந்தார்: மார்தட்டிக்கொள்கிறது மஹிந்த அணி!
சிங்கள, பௌத்த வாக்குகளால் பதவிக்கு வந்துவிட்டு வடக்குக்கு சென்று அவர்களை காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஜனாதிபதி செயல்படக்கூடாது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தோல்வி அடைந்தார்.
நாடு முழுதும் 42 சதவீத வாக்குகளை கிடைக்கப்பெற்றது. இதில் பெரும்பாலான விகிதம் சிங்கள, பௌத்த வாக்குகளாகும்.
எனவே, சிங்கள, பௌத்த வாக்குகளில் பதவிக்குவந்துவிட்டு வடக்குக்கு சென்று சிங்கள, பௌத்த மக்களை காட்டிக்கொடுக்கும் செயலில் ஈடுபடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.
திஸ்ஸ விகாரையென்பது புராதான விகாரையென்பது ஏற்கப்பட்டுள்ளது. இதற்குரிய காணி உரித்தும் உள்ளது.
ஜனாதிபதியின் அறிவிப்பானது சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தரப்புக்கு மேலும் உந்து சக்தியாக அமையும்.” -என சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.





