இலங்கையில் அரச அலுவலகங்களுக்குத் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்
இலங்கையில் அரச அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.
இன்று காலை பதுளை மாவட்டத் தொழில் காரியாலயத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
உதவித் தொழில் ஆணையாளர் வழங்கிய தகவலின்படி, பொலிஸார் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஏற்கனவே கடந்த மாதம் கண்டி மாவட்டச் செயலகம் மற்றும் நாவலபிட்டி பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் இதே போன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சோதனைகளின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில், இவை பொதுமக்களையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் நோக்கில் அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சல்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவ்வாறான திட்டமிட்ட போலி மிரட்டல்களின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.





