மின்வெட்டு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
நுரைச்சோலை “லக்விஜய” மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், இதன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படும் என்றும் பரவி வரும் செய்திகள் தவறானவை என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிர்வரும் காலத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட 36 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்கள் ஏற்கனவே தரையிறக்கப்பட்டுள்ளன.
மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் வழமை போன்று நடைபெற்று வருவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேபோன்று, ஏனைய நிலக்கரி விநியோகங்களை தடையின்றி வழங்க முடியும் என விநியோகஸ்தர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தேவையேற்படின் அவசர நிலக்கரி விநியோகத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் மாதம் இறுதி வரை மின் உற்பத்திக்காகத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ள நிலையில், மின்வெட்டு ஏற்படும் அபாயம் இல்லை என எரிசக்தி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
எனவே, இத்தகைய தவறான மற்றும் தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம் என எரிசக்தி அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.





