சிவப்புக் கோட்டை கடந்த அமெரிக்கா – 20 நிறுவனங்கள், 10 நிர்வாகிகள் மீது தடை விதித்த சீனா!
அமெரிக்காவிற்கு சொந்தமான 20 பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் 10 நிர்வாகிகள் மீது தடைகளை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
தைவானுக்கு தேவையான இராணுவ உபகரணங்களை விநியோகம் செய்துவது தொடர்பில் வொஷிடன் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சீனா இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
சீனாவில் உள்ள நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவதும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றைக் கையாள்வதைத் தடை செய்வதும் இந்தத் தடைகளில் அடங்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிறுவனங்களில் நார்த்ரோப் க்ரம்மன் சிஸ்டம்ஸ் கார்ப்பரேஷன் ( Northrop Grumman Systems Corporation), எல்3ஹாரிஸ் மரைடைம் சர்வீசஸ் (L3Harris Maritime Services) மற்றும் செயின்ட் லூயிஸில் (St. Louis) உள்ள போயிங் (Boeing) ஆகியவை அடங்கும்.
அதே நேரத்தில் பாதுகாப்பு நிறுவனமான ஆண்டூரில் இண்டஸ்ட்ரீஸ் (Anduril Industries) நிறுவனர் பால்மர் லக்கி ( Palmer Luckey) தடைசெய்யப்பட்ட நிர்வாகிகளில் ஒருவராவார்.
அவர்கள் இனி சீனாவில் வணிகம் செய்ய முடியாது என்பதுடன், நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாட்டில் உள்ள அவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சகம், “தைவான் பிரச்சினை சீனாவின் முக்கிய நலன்களின் மையத்தில் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சீனா – அமெரிக்க உறவுகளில் கடக்கக்கூடாத முதல் சிவப்புக் கோட்டை அமெரிக்கா கடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“தைவானுக்கு ஆயுத விற்பனையில் ஈடுபடும் எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ அந்தத் தவறுக்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





