இந்தியாவில் பல்வலிக்கு உட்கொண்ட மருந்தால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல்வலியால் அவதிப்பட்ட 32 வயதுப் பெண், மருந்துக் கடை விற்பனையாளர் தந்த மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.சனிக்கிழமை (மே 17) இந்தத் தகவலை அது வெளியிட்டது.
மருந்துக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை செய்தியாளர்களிடம் கூறியது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபுவா மாவட்டத்தில் உள்ளது தர்மபுரி எனும் கிராமம். அங்கு வசித்த ரேகா எனும் பெண், வியாழக்கிழமை மாலை, பல்வலிக்கு மருந்து கேட்டு அருகிலுள்ள மருந்துக் கடையை நாடினார்.
அங்கிருந்த விற்பனையாளர் ‘சல்ஃபாஸ்’ மாத்திரையை ரேகாவிடம் தந்தார். கிருமித்தொற்றைக் குணமாக்கப் பயன்படுத்தப்படும் இந்த வகை மாத்திரையை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே உட்கொள்ளலாம்.
வியாழக்கிழமை இரவு அந்த மாத்திரையை உட்கொண்டதும் ரேகாவின் உடல்நிலை மோசமானது.மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை காவல்துறைக்குத் தகவல் தந்தனர். அதையடுத்து, உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.
ரேகா ‘சல்ஃபாஸ்’ மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்ததாக முதற்கட்ட ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியது.தொடர்ந்து, இதன் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மருந்துக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரது கடை மூடப்பட்டது.
‘சல்ஃபாஸ்’ மருந்து அக்கடையில் வைக்கப்பட்டிருந்ததன் காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் மருந்துக் கட்டுப்பாட்டுப் பிரிவும் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ரேகாவிற்கு அந்த மருந்தை வழங்கிய விற்பனையாளரைக் காவல்துறை தேடிவருகிறது