வெடுக்குநாறிமலை நிலத்தை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அவசர கடிதம்
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான நிலம் மற்றும் பாதையை உடனடியாக விடுவித்துத் தருமாறு வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் இன்று ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வரலாற்றுத் தொன்மை மிக்க இந்த ஆலயத்தின் வழிபாட்டுச் செயற்பாடுகளுக்காக, ஒரு ஏக்கர் காணியினை விடுவித்துத் தருமாறு ஆலய அறங்காவலர் சபையினர் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து முன்னரே ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், இதுவரை திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என அறங்காவலர் சபையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், ஆலயத்திற்குச் செல்லும் பாதையை வவுனியா வடக்கு பிரதேச சபையிடம் ஒப்படைக்கும் பட்சத்தில், அதனைப் புனரமைக்கத் தயாராக இருப்பதாகவும் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
எனவே, ஆளுநர் இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு, ஆலயத்திற்கான காணி மற்றும் பாதையை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.





