வீதியில் தனியாக தவித்த வயோதிப பெண்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/07/lady-2-jpg.webp)
ஹொரணை நகரிலுள்ள போ மரத்திற்கு அருகில் கைவிடப்பட்ட வயோதிபப் பெண்ணொருவர் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவல் மற்றும் புகைப்படங்கள் முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ளன.
இதன்படி, குறித்த வயோதிப பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பெண்ணிடம் ஹொரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த வயோதிப பெண் ஹொரண மொரகஹஹேன பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கடந்த 28ஆம் திகதி ஹொரணை பிரதேச செயலகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
ஆனால், அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. இது தொடர்பில் குறித்த வயோதிப பெண்ணின் மகள் கடந்த 29ஆம் திகதி மொரகஹஹேன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த வயோதிபப் பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் குழு அண்மையில் குறித்த பெண்ணின் வீடு குறித்த தகவலை உறுதிப்படுத்தி அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.
எனினும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீட்டிற்குச் சென்றபோது, குறித்த வயோதிபப் பெண் வீடு திரும்பியிருந்தது தெரியவந்துள்ளது.
குறித்த வயோதிபப் பெண் ஏதோ மனநலக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அவருடன் வீட்டில் வசிக்கும் ஒரே மகளும் திருமணமாகாதவர்.
தனது தாய் பல சந்தர்ப்பங்களில் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், பல நாட்களாக காணாமல் போயுள்ளதாகவும் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தானும் பல பொருளாதார சிரமங்களுக்கு உள்ளாகி வருவதால், தனது தாயை கவனிப்பது சிரமமாக உள்ளதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
எனவே, தனது தாயை முதியோர் இல்லத்தில் ஒப்படைக்க காவல்துறை அதிகாரிகள் தலையிட வேண்டும் என்றும் அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த வயோதிபப் பெண்ணும் அவரது மகளும் கடும் நிதிச் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.