UKவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி கோமாவிற்கு சென்றதால் பரபரப்பு!
பிரித்தானியாவில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கோமா நிலைக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
04 வயதான சியன்னா டுனியன் (Sienna Dunion) என்ற சிறுமி ப்ளூ காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு அரிதான மற்றும் கடுமையான மூளை கோளாறை ஏற்படுத்தும் அக்யூட் நெக்ரோடைசிங் என்செபாலிடிஸ் ( Acute Necrotising Encephalitis) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவருடைய நிலை மோசமடைந்ததை தொடர்ந்து உடனடியாக நாட்டிங்ஹாமில் (Nottingham) உள்ள குயின் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவருக்கு குடலில் 60 சதவீதத்தை அகற்றுவது உட்பட பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அவர் வாழ்நாள் முழுவதும் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சியன்னா தனது முந்தைய நிலைக்குத் திரும்ப மாட்டார் என்றும், நடைபயிற்சி மற்றும் பேசுதல் போன்ற அடிப்படை செயல்பாடுகளை மீண்டும் கற்றுக்கொள்ள பல ஆண்டுகள் தீவிர மறுவாழ்வு தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் பிசியோதெரபி, பேச்சு சிகிச்சை உள்ளிட்டவற்றிற்காகவும், மறுவாழ்வின் குறிப்பிடத்தக்க செலவுகளை ஈடுகட்டவும், அவருடைய பெற்றோர் இப்போது நிதி திரட்டி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




