“கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதத்தன்மைக்கு ஆபத்து”?
” வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை புனித தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை முழுமையாகப் பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும் அதேவேளையில், அப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் N. Vedhanayakan தெரிவித்தார்.
கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அமைந்துள்ள ‘தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம்’ வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் 100 ஆண்டுகளுக்கு குத்தகையின் அடிப்படையில் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13.03.2026) காலை மணிக்கு நடைபெற்றது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1735ஆம் ஆண்டு தண்டிகை கனகநாயக முதலியாரால் நிறுவப்பட்ட இந்த மடமானது, காலம்காலமாக அவரது மரபுவழி வந்தவர்களால் நம்பிக்கைச் சொத்தாக நிர்வகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தெய்வங்கள் இளைப்பாறும் மண்டபம், அந்தியேட்டி மண்டபம் மற்றும் இரண்டு கடைகள் அடங்கலான எஞ்சிய நிலப்பகுதியை எதிர்காலப் பராமரிப்புக் கருதி வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் அதன் உரிமையாளர்களால் இன்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விசேட உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:
” கீரிமலை தீர்த்தக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் புனிதமானவையாகும். அந்த இடத்தின் புனிதத்தன்மையைப் பேணிப் பாதுகாத்துக்கொண்டே நாம் அங்கு அபிவிருத்திகளைச் செய்ய வேண்டும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மடத்தைப் பிரதேச சபையிடம் கையளிப்பது மிகவும் பொருத்தமானதொரு முடிவாகும்.
குறித்த ஆதனம் பிரதேச சபைக்கு உரித்தானதாக இருந்தால் மாத்திரமே, அவர்களால் அங்கு முறையான அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முடியும்.
இந்த மடத்தை ஒரு முறையான நிர்வாக ஒழுங்குக்குள் கொண்டு வருவதன் ஊடாக, இங்கு வரும் மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.
அத்துடன், இந்தப் பிரதேசம் சுற்றுலா சார்ந்த பாரிய ஈர்ப்பையும் கொண்ட ஒரு பிரதேசமாகும். எனவே, அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும் அதேவேளையில், இப்புனித பூமியின் புனிதத்தன்மையையும் நாம் எவ்விதக் குறையுமின்றிப் பேணிப்பாதுகாக்க வேண்டும்.
என்றார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கௌர தவிசாளர், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், வலி. வடக்கு பிரதேச சபையின் செயலாளர், சிவாச்சாரியார்கள், சிவபூமி அறக்கட்டளை நிதியத்தின் தலைவர், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





