இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ கையெழுத்தானதுl
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுமார் 20 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று டெல்லியில் எட்டப்பட்டுள்ளது.
‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ (Mother of all deals) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தமானது, 200 கோடி மக்கள் தொகையையும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் கால் பகுதியையும் கொண்ட ஒரு பிரம்மாண்ட சந்தையை உருவாக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா ஆகியோரின் இந்திய வருகையின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறிப்பாக, ஐரோப்பிய கார்கள் மீதான இறக்குமதி வரி 110 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படவுள்ளதால், சொகுசு கார்களின் விலை கணிசமாகக் குறையும். அதேபோல், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, ஆபரணங்கள் மற்றும் தோல் பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் வரி விலக்குக் கிடைக்கும். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.
வர்த்தகம் மட்டுமின்றி, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தியத் தொழிலாளர்கள் ஐரோப்பாவிற்குச் செல்வதற்கான ‘நகர்வு ஒப்பந்தமும்’ (Mobility Pact) இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பகுதியைத் தீர்மானிக்கப்போகும் இந்த ஒப்பந்தம், சீனா மற்றும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் பொருளாதார நிலையை மாற்றி, இந்தியாவின் மூலோபாய வலிமையை உலக அரங்கில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





