விக்டோரியா மாநிலத்தின் பல நகரங்களுக்கு அவசரகால எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிக மோசமான வெப்ப அலை வீசி வரும் நிலையில், அங்கு கட்டுக்கடங்காத காட்டுத்தீயினால் பல நகரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக, ‘ஓட்வேஸ்’ (Otways) பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் ‘கெல்லிபிராண்ட்’ (Gellibrand) நகருக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸைத் தாண்டியுள்ளதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிலவரம் இன்னும் மோசமடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மெல்போர்ன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீயின் புகை மூட்டம் அதிகரித்துள்ளதால் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்கு அவுஸ்திரேலியாவில் ‘லுவானா’ (Luana) சூறாவளி நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருவதால், அங்கு பலத்த மழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியாவிலும் வெப்பநிலை 48 பாகை செல்சியஸை நெருங்கியுள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





