அநுர அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கியது சீனா: வெளிவிவகார அமைச்சர் கூறியது என்ன?
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்குரிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு இன்று (12) பயணம் மேற்கொண்ட அவர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் Vijitha Herath இரு தரப்பு பேச்சில் ஈடுபட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டே சந்திப்பு நடைபெற்றது.
வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் கூட்டாண்மையை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
பேரிடரால் சேதமடைந்துள்ள வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றை மீளமைப்பதற்கான மேலதிக ஆதரவை வழங்குமாறு விஜித ஹேரத் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, இம்முயற்சிக்கு சீனாவின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் தலைமையில் இலங்கை வேகமாக மீண்டெழும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சரியான பாதையில் இலங்கை பயணிக்கிறது என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
‘ஒரே சீனா கொள்கை’ மீதும், சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீதும் இலங்கையின் உறுதியான பற்றுதலை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இக்கலந்துரையாடலில் சீனாவின் துணை வெளிவிவகார அமைச்சர் , இலங்கைக்கான சீன தூதுவர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.





