புதிய அரசமைப்பு ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம்!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும். புதிய அரசமைப்பு ஊடாக அதற்குரிய நடவடிக்கை இடம்பெறும் என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் மற்றும் புதிய அரசமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் கேள்விகளை எழுப்பி இருந்தார்.
மேற்படி கேள்விகளுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் நேற்று பதில்களை வழங்கினார்.
இதன்போது அவர் கூறியவை வருமாறு,
“ புதிய அரசமைப்பு தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதற்கமையவே நடவடிக்கை இடம்பெறும்.
அரசமைப்பு வரைவு நகல் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு, தேவையான திருத்தங்கள் சகிதம் சர்வஜன வாக்கெடுப்புடனேயே அது நிறைவேற்றப்படும்.
அரசமைப்பு தொடர்பில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் ஏனைய அறிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றன.
உரிய மதிப்பீடுகளின் பின்னர் உத்தேச வரைவு நகல் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். புதிய அரசமைப்பு ஊடாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் நடவடிக்கை தொடர்பில் தற்போது மதிப்பீடு செய்யப்படுகின்றது.” – என்றார் பிரதமர்.





