இறுதிப்போரை வழிநடத்திய பொன்சேகா எழுதிய நூல் வெளியீடு!
இலங்கையில் இறுதிக்கட்ட போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய நூல் நேற்று வெளியிடப்பட்டது.
“நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி – அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் இந்த போரை விட்டு விடமாட்டேன்” என குறித்த நூலுக்கு பெயரடப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் இதற்கான வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பிரதம விருந்தினராகவும், பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மூத்த இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத் தளபதியாக பணியாற்றிய சரத் பொன்சேகாவின் பதவிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை மையப்படுத்தி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரு தீர்க்கமான காலகட்டத்தில் தனது அனுபவங்களையும் தான் அனுபவித்த தலைமைத்துவ சவால்கள் தொடர்பில் பீல்ட் மார்ஷல் பொன்சேகா உரையாற்றினார்.





