கடுகண்ணாவ மண்சரிவு – உயிரிழந்தவர்களில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும்
கண்டி(Kandy), பஹல கடுகண்ணாவ(Pahala Kadugannawa) பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 8.45 மணியளவிலேயே பாரிய பாறையொன்றுடன் மண் சரிந்துள்ளது. வீடும், உணவகமும் முற்றாக சேதமடைந்துள்ளது.
மண்ணுக்குள் சிக்குண்டவர்களில் ஒருவரின் சடலம் ஆரம்பத்தில் மீட்கப்பட்டது. மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் மாவனல்லை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
மண்ணுக்குள் ஐவர் புதையுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் 8 மணிநேர மீட்பு பணிக்கு பிறகு மேலும் மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இராணுவம், தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கடும் மழை பெய்து வந்த நிலையிலேயே இன்று காலை 8.45 மணியளவில் கண்டி – கொழும்பு(Kandy-Colombo) பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது உணவகத்துக்குள் 9 பேர் வரை இருந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பேராதனை(Peradeniya) பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் என தெரியவருகின்றது. இவர் மாவனல்லை பகுதியை சேர்ந்தவர்.




