ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கும் மனச்சோர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவில் மனச்சோர்வு ஏற்படுவதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நிபுணர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஆண்களை விட பெண்களின் மரபணுவில் மனச்சோர்வை ஏற்படுத்தும் பங்கு இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் 2 லட்சம் பேரின் மரபணுவை அடிப்படையாகக் கொண்டு, குயின்ஸ்லாந்தின் QIMR பெர்கோபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது.
இதில், இருபாலினருக்கும் பொதுவான 7,000 மரபணு மாற்றங்களும், பெண்களை மட்டும் பாதிக்கும் 6,000 மாற்றங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
பெண்களுக்கு, பகல்நேர தூக்கம், அதிக பசி, எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் அதிகம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆண்களில் போதைப்பொருள் பயன்பாடு, கோபம் மற்றும் ஆபத்தான நடத்தைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த முடிவுகள், மனச்சோர்வை பாலினத்தின்படி தனித்தனியாக ஆராய்வதற்கும், சிகிச்சை முறைகளைக் கண்டறிவதற்கும் உதவும் என ஆராய்ச்சியாளர் ஜோடி தாமஸ் தெரிவித்தார்.





