டிரம்ப் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டுவரும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கத் திட்டமிடுகின்றன.
உக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா மீது மேலும் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“அமைதி பற்றி பேசும் புடின், அதே நேரத்தில் உக்ரைன் மீது குண்டுவீச்சை நிறுத்தவில்லை. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் போரில் இருந்து விலகாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு ரஷ்யாவிடம் இருந்து கடுமையான எதிர்வினைகள் கிளம்பியுள்ளன.
“அமெரிக்க ஜனாதிபதி எதை நோக்கி நகர்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். புதிய தடைகளை சமாளிக்க நம்பிக்கை இருக்கிறது. எச்சரிக்கைகள், மிரட்டல்கள் டிரம்ப்பை இந்த வகையான பேச்சுகளுக்கு தூண்டுவது என்ன என்பது ஆச்சர்யமாக உள்ளது” என ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரியாப்கோவ் கூறுகையில்: “முதலில், எச்சரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் வைப்பது எங்களால் ஏற்க முடியாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்றார்.