இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையை நிராகரித்த அரசு!

ஒரே பாலினத்தர்களின் பாலியல் தொடர்பை குற்றமாக்கும் தண்டனைச் சட்டக் கோவையின் சட்டப் பிரிவுகளை திருத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை அரசின் சட்ட வரைபாக ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரையை, அரசாங்கம் ஏற்கத் தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது.
இலங்கைக்கு தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் முடிவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில், ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“ஒரே பாலின உறவினை குற்றமற்றதாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது எனது புரிதல். அது விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்.”
உயர்ஸ்தானிகரின் கருத்துதுக்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார, அத்தகைய சட்ட வரைபு எதுவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறினார்.
“அமைச்சின் நிகழ்ச்சி நிரலில் எந்தவொரு உத்தியோகபூர்வ நிலைமையிலும், ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் அத்தகைய வரைபு எதுவும் இல்லை,” என அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
ஒரே பாலினத்தவர்களுக்கிடையேயான பாலியல் தொடர்பை குற்றமாக்கும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 365 மற்றும் 365A-வை இரத்து செய்ய/திருத்துவதற்கான தனிநபர் பிரேரணையை அரசாங்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு 2025 மே 22 அன்று எழுதிய கடிதத்தில் பரிந்துரைத்தது.
வயது வந்தவர்களுக்கிடையேயான ஒருமித்த ஒரே பாலின பாலியல் தொடர்பை குற்றமற்றதாக்க தேவையான திருத்தங்களைச் செய்ய சட்டத்தை திருத்துவதற்கான தனிநபர் பிரேரணையை அப்போதைய அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இது பின்னர் ஒரு சட்ட வரைபாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏப்ரல் 4, 2023 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தண்டனைச் சட்டக்கோவை (திருத்த) வரைபு, ஏப்ரல் 26, 2024 அன்று நாடாளுமன்றக் குழு இல 08 இல் நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.
அப்போது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும், நாடாளுமன்றத்தின் தனிநபர் பிரேரணைக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த செப்டம்பர் 23 அன்று இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்ற அனுர குமார திசாநாயக்க, செப்டெம்பர் 24, 2024 அன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம் இந்த பிரேரணை செல்லுபடியற்றதாகிவிட்டது.
இந்த பிரேரணையை தாமதமின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ பதிலை அளித்துள்ளதா என்பது தெரியவில்லை.