உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு ரஷ்யா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியதாக திங்கட்கிழமையன்று (ஜூன் 23) உக்ரேன் தெரிவித்தது.
தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் அது கூறியது.
ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப்போவதாக ஜூன் 22ஆம் திகதியன்று உக்ரேனிய ராணுவம் தெரிவித்திருந்தது.இதையடுத்து, ரஷ்யா பேரளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் இப்போரை முடிவுக்குக் கொண்டு வர அரசதந்திர ரீதியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முடங்கிவிட்டன.ஆகக் கடைசியாக கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு இருதரப்பினரும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தின.
“உக்ரேனியத் தலைநகர் கியவ் மீது மேலும் ஒரு கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆளில்லா வானூர்திகள் பலவற்றை ரஷ்யா இடைவிடாது அனுப்பி தாக்குதல் நடத்தியது,” என்று உக்ரேனிய ராணுவம் அறிக்கை வெளியிட்டது.
கியவ்வின் நகர மையத்தில் ஆளில்லா வானூர்திகள் பறக்கும் சத்தமும் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர்கள் கூறினர்.
நகர மையத்தில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் ஏறத்தாழ பத்து பேர் அடைக்கலம் நாடியதாகவும் அவர்களில் பலர் கைப்பேசி மூலம் செய்திக் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.