உக்ரைனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் – ரஷ்யாவே பொறுப்பு என தீர்ப்பளிப்பு!

ஜூலை 2014 இல் கிழக்கு உக்ரைனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், MH17 சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விமான நிறுவனம் தீர்ப்பளித்துள்ளது.
பயணிகள் விமானம் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் இருந்த 298 பேரும் கொல்லப்பட்டனர்.
விமான விபத்துக்கு கிரெம்ளின் எப்போதும் எந்தப் பொறுப்பையும் மறுத்து வருகிறது.
இந்நிலையில் ஐ.நா.வின் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் கவுன்சில் (ICAO) ரஷ்ய கூட்டமைப்பு சர்வதேச விமானச் சட்டத்தின் கீழ் அதன் கடமைகளை நிலைநிறுத்தத் தவறிவிட்டது என்று தீர்ப்பளித்துள்ளது.
“இந்த கொடூரமான வன்முறைச் செயலுக்கு ரஷ்யா இறுதியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதன் மோசமான நடத்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
டச்சு வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப், இது “உண்மையை நிலைநாட்டுவதற்கும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதற்கும்” ஒரு முக்கியமான படியாகும் என்று கூறினார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH17 ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குப் பயணித்தபோது, உக்ரைனின் டான்பாஸ் பகுதியில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் படைகளுக்கும் இடையிலான மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்டது.
பெரும்பாலான பயணிகள் மற்றும் பணியாளர்கள், 196 பேர், நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள். விமானத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 38 பேர், 10 பிரிட்டிஷ் குடிமக்கள், பெல்ஜியம் மற்றும் மலேசிய நாட்டவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.