கோரிக்கைகளுடன் சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் ரஷ்யா

ரஷ்யா, சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது.அமெரிக்க அதிகாரிகளிடம் தமது கோரிக்கைகளின் பட்டியலை ரஷ்யா வழங்கியிருப்பதாக இதன் தொடர்பில் நன்கு விவரமறிந்த இரு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாஸ்கோவின் கோரிக்கை பட்டியலில் என்னென்ன இடம்பெற்றுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதனை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு உக்ரேனுடன் அமைதி பேச்சுக்கு ரஷ்யா முன்வருமா என்பதும் தெரியவில்லை என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
மாஸ்கோ சமர்பித்துள்ள கோரிக்கைகள் விரிவாகவும் முன்பு உக்ரேன், நேட்டோவிடம் தெரிவித்த கோரிக்கைகளை ஒத்து இருப்பதாகவும் அவர்கள் விளக்கினர்.
உக்ரேனுக்கு நேட்டோ உறுப்பினர் தகுதி வழங்கக் கூடாது, உக்ரேனில் வெளிநாட்டு துருப்புகளை அனுப்பக் கூடாது, கிரிமியா உட்பட ரஷ்யா தனக்குச் சொந்தம் என்று கோரும் வட்டாரம், ரஷ்யாவுக்குச் சொந்தமான நான்கு மாநிலங்கள் ஆகியவற்றுக்கு அனைத்துலக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் போன்றவை ரஷ்யாவின் கோரிக்கைகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், அமெரிக்காவும் நேட்டோவும் போருக்கான மூல காரணத்தை கண்டறிய வேண்டும் என்று அண்மைய ஆண்டுகளாக ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கமும் இதில் அடங்கும்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உக்ரேனுடனான 30 நாள் சண்டை நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபர் புட்டினின் பதிலை எதிர்பார்த்துக் காத்து கிடக்கிறார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிச் செய்யப்பட வேண்டிய நிலையில் சண்டை நிறுத்தத்திற்கான புட்டின் கடப்பாடு இன்னமும் நிச்சயமற்றதாக உள்ளது.
கேஜிபியின் (ரஷ்ய புலனாய்வு அமைப்பு) முன்னாள் அதிகாரியான புட்டின், போர் நிறுத்தத்தை அமெரிக்கா, உக்ரேன், ஐரோப்பாவை பிளவுபடுத்தும் முயற்சிகளுக்குப் பயன்படுத்தலாம் என்று சில அமெரிக்க அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.