தான்சானியாவில்(Tanzanian) ஜனாதிபதி தேர்தல் எதிர்ப்பு போராட்டங்களில் 700 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன்(Samia Suluhu Hassan) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தேர்தல் சீர்திருத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதில் புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான சடேமாவின் தலைவர் டுண்டு லிசு(Dundu Lisu) அதில் கையெழுத்திடவில்லை. பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள சடேமா கட்சிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த விவகாரம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தான்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசனின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.இதில் மீண்டும் வெற்றி பெற்று சாமியா சுலுஹு ஹாசன் மீண்டும் ஜனாதிபதி தேர்வானார்.
ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்ததாக முக்கிய எதிர்க்கட்சியான சடேமா குற்றம் சாட்டியது. இதையடுத்து தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வன்முறையால் தான்சானியாவில் இணையத்தை முடக்கி ஆளும் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.





