சத்தீஸ்கர் மாவட்டங்களில் சரண்டைந்த 66 நக்சலைட்டுகள் ; 49 பேருக்கு மொத்தம் 2.27 கோடி பரிசு

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தீவிர சோதனையைத் தொடர்ந்து, ஐந்து மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 24) 66 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்தனர்.
சரணடைந்தவர்களில் 49 பேர் பற்றித் தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2.27 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் 25 நக்சலைட்களும், தண்டேவாடா மாவட்டத்தில் 15 நக்சலைட்களும், கன்கெர் மாவட்டத்தில் 13 பேரும், நாராயண்பூர் மாவட்டத்தில் 8 பேரும், சுக்மா மாவட்டத்தில் 5 பேரும் பாதுகாப்பு படையினர் முன் சரணடைந்தனர். இவர்களில் 27 பேர் பெண்கள் ஆவர்.
சரணடைந்தவர்களுக்கு மாநில அரசின் நக்சலைட் மறுவாழ்வு உதவி திட்டத்தின் கீழ் தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்பட்டது.
நக்சலைட்களின் மறுவாழ்வுக்காகச் சத்தீஸ்கர் அரசு ‘உங்கள் நல்ல கிராமம்’ என்ற திட்டத்தைத் தொடங்கி, தொலைதூர கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறது.இத்திட்டமும், பஸ்தர் காவல்துறையினர் தொடங்கியுள்ள மறுவாழ்வு திட்டமும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாகச் சரணடைந்த நக்சலைட்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.அதற்காக மத்திய ஆயுதப்படை மற்றும் மாநிலக் காவல்துறை சிறப்புப் படைகள் உருவாக்கப்பட்டன. இவர்களுடன் துணை ராணுவப்படையினரும், விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிர தேடுல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால், நக்சல் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் தேடுல் வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் இதர நக்சலைட்கள் பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்து வருகின்றனர்.