இலங்கையை விட்டு 5,000 வைத்தியர்கள் வெளியேற முயற்சி!

சுமார் 5,000 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவைகளிலிருந்து விலகிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மருந்து விநியோகத்தர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு பாரிய சிக்கல்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சங்கத்தின் செய்தித் தொடர்பாளரான வைத்தியர் சமில் விஜேசிறி தெரிவிக்கையில்,
சேவையிலிருந்து தங்களை விலக்கிக்கொண்ட வைத்தியர்கள் வெளிநாடுகளில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான தகைமைகளை முன்னரே பெற்றுக்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு மருத்துவ சேவைகள் தொடர்பான பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர். வெளிநாடுகளில் சிறந்த வாழ்க்கைச் சூழல், பொருளாதார வளங்கள் காணப்படுவதால் அவர்கள் அங்கு தொழில் வாய்ப்புகளை தேடுகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், நாட்டில் உள்ள வைத்தியர்களையும் மருத்துவ ஊழியர்களையும் பாதுகாப்பதோடு, நிலையான பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதார சேவையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய, அரசாங்கம் ஒரு குறுகிய கால தீர்வினை காண வேண்டும். சுகாதார சேவை மோசமான நிலைக்குச் செல்வதை தடுப்பதற்குத் தேவையான மாற்று வழிகளை வரவு – செலவு திட்டம் அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன் என்றார்.