ஐரோப்பிய ஒன்றியம் மீதான 50% வரி விதிப்பு ஜூலை 9 வரை நிறுத்திவைப்பு: அதிபர் டிரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம் மீதான 50% வரி விதிப்பை ஜூலை 9ஆம் திகதிவரை தான் நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (மே 25) தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டாக்டர் வோன் டெர் லெயனுடன் தான் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலுக்குப் பின் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மே 23ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் தான் மேற்கொண்டுவரும் பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும் விளைவதாகத் தெரியவில்லை என்று தெரிவித்த டிரம்ப், ஒன்றியத்துக்கு எதிரான கடுமையான வரிகளை ஜூன் 1ஆம் திகதியே தான் செயல்படுத்த இருப்பதாகக் கூறினார்.
இது குறித்து நியூ ஜெர்சியில் தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுமுன் நிருபர்களுடன் பேசிய டிரம்ப், “டாக்டர் வோன் டெர் லெயன் என்னை அழைத்து வரிகள் குறித்து தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் ஜூன் 1ஆம் ந்திகதி வரி விதிப்பை ஒத்திவைக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்,” என்று விளக்கினார்.
முன்னதாக, இது பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டாக்டர் வோன் டெர் லெயன், டிரம்ப்புடன் தான் பயனுள்ள தொலைபேசி உரையாடல் நடத்தியதாகவும், எனினும் சிறந்த ஒப்பந்தத்துக்கு ஜூலை 9வரை கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
“பேச்சுவார்த்தையை துரிதமாகவும் ஒரு தீர்வை எட்டும் விதத்திலும் எடுத்துச் செல்ல ஐரோப்பிய நாடுகள் தயாராக உள்ளதாக,” ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக வர்த்தகக் கொள்கைகளை வகுக்கும் டாக்டர் வோன் டெர் லெயன் தெரிவித்தார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ஒரேயடியான வர்த்தகப் போரை தவிர்க்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஜூலைவரை வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக இணக்கம் ஏற்பட்டிருந்தது.ஆனால், மே 23ஆம் திகதி டிரம்ப் செய்த அதிரடி அறிவிப்பால் பிரச்சினை தலைதூக்கியது.
அப்பொழுது பேசிய அமெரிக்க அதிபர் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது அமெரிக்காவுக்கு எதிராக அனுகூலங்களைப் பெறுவதற்காகவே என்று தான் அடிக்கடி கூறியதையே மீண்டும் கூறியதுடன், தனக்கு ஒன்றியத்துடன் உடன்பாடு காணுவதில் விருப்பமில்லை என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தமது கருத்தைத் தெரிவித்த ஜெர்மானிய நிதியமைச்சர் லார்ஸ் கிலிங்பெயல், அமெரிக்காவுடன் தீவிரமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற தமது விருப்பத்தைத்தெரியப்படுத்தினார். மேலும், இது குறித்து தான் சக அமெரிக்க அமைச்சர் ஸ்காட் பெசன்டுடன் பேசியதாகவும் கூறினார்.