இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தால் மாத்திரமன்றி பொது மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மேலும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிதி மற்றும் பொருள் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கியுள்ளன.
இந்த நிலையில், வீடுகளை இழந்த மக்களுக்காக நபர் ஒருவர் தனக்கு சொந்தமான 24 பேர்ச் காணியை இலவசமாக வழங்க முன் வந்துள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான கம்பஹா மாவட்டத்தின் ஜாஎல பகுதிக்கு அருகில் உள்ள தனது நிலத்தை இவ்வாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக ஷியாம் டயஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 4 கோடி ரூபா வரை பெறுமதியான காணியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்காக வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள இந்த செயற்பாடு உதவியாக இருக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு இந்த காணியை வழங்குவதன் மூலம் அது பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்றடையும் எனவும் ஷியாம் டயஸ் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தங்களில் சிக்கி மீண்டு வர முயற்சிக்கும் மக்களுக்கு இந்த நெருக்கடியான சூழ்நிலையில் உதவிகளை செய்தால் அது தனக்கு மன ஆறுதலை தரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.